செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ கோப்பு புகைப்படம்
தமிழ்நாடு

அண்ணாவைப் பற்றி எவன் தவறாக பேசினாலும் அவன் நாக்கு அழுகிவிடும் - செல்லூர் ராஜூ

webteam

மதுரை பந்தடி ஐந்தாவது தெருவில் மதுரை மாநகர் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியபோது...

அண்ணா அவர்களையும், எம்.ஜி.,ஆர் அவர்களையும் வேறு, வேறு தாய் பெற்றிருந்தாலும், இருவரும் ஒரே மனம் ஒரே குணம் படைத்தவர்கள். இருவரும் பிரிக்க முடியாத சகோதரர்கள். அண்ணா மீது எம்.ஜி.ஆர் அதிக பாசம் கொண்டிருந்தார். தி.மு.கவில் எம்.ஜி.ஆர். நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரை தான் அண்ணா முன்னிலை படுத்துவார். கட்சியில் 28-வது இடத்தில் இருந்தவர் டாக்டர் கலைஞர். அண்ணா இருக்கும் வரை கலைஞரை தட்டியே வைத்திருந்தார்.

ஆனால், தற்போது கலைஞர் குடும்பம் திமுகவை குடும்ப கட்சியாக வைத்துள்ளனர். அண்ணா அவர்கள் கட்சியை கஷ்டப்பட்டு வளர்த்தார். ஆனால் இன்று 4 சினிமாவில் நடித்து விட்டு படம் ஓடுனதும், நான் தான் முதலமைச்சர் என்று சொல்கின்றனர். சிலர் உடனடியாக கட்சி ஆரம்பிக்கின்றனர், உடனடியாக மந்திரியாக வேண்டும், உடனே முதலமைச்சராக வேண்டும் என நினைக்கின்றனர். எல்லாம் பாஸ்ட் புட் ஏரியாவாக மாற்றுகின்றனர்.

anna

அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட அதிமுகவிற்கு தான் உரிமை உண்டு. திமுகவினர் அண்ணாவின் கொள்கைகளை குழிதோண்டி புதைத்து விட்டனர். கலைஞர் கருணாநிதியின் மகன், அப்பாவிற்கு தப்பாமல் பிறந்திருக்கிறார். அதனால் தான் செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றார். தற்போது சிலர் படித்தவனுக்கு பித்துப்பிடிச்சது போல் கேலி பேசுகின்றனர். அண்ணாவை பற்றி கேலி பேசுகின்றனர். இறந்த தலைவர் பற்றி இழிவாக பேசுபவன் இழிபிறவி தான்.

நாங்கள் கூட கலைஞரை மரியாதையாக தான் பேசுகிறோம். ஆனால் மறைந்த தலைவரை மதிக்காமல் பேசினால் தமிழ் சமூகம் மிதித்து விடுவார்கள். ஆளும் கட்சி என்று மத்தாப்பில் பேசலாம். அண்ணாவை பற்றி பேசினால் நாக்கை துண்டாக்கும் கொள்கை மறவர்கள் இருக்கிறார்கள். அண்ணா பல்வேறு சாதனைகளை செய்தவர். அண்ணாவை பற்றி எவன் தவறாக பேசினாலும் அவன் நாக்கு அழுகிவிடும். ஏழை எளிய மக்கள் முன்னேறியதற்கு பெரியார், அண்ணா தான் காரணம். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை திமுக மூடுவிழா கண்டு வருகிறது. எனவே அண்ணாவின் வாரிசு நாம் தான் என்றார்.