மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமை விரும்பினால், கட்சி எந்த தொகுதியை சொல்கிறதோ அந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கட்சி எந்த தொகுதியை சொல்கிறதோ, அந்தத் தொகுதியில் போட்டியிடுவேன். இன்று மாலை எங்கள் நாடாளுமன்ற குழுக் கூட்டம் உள்ளது. அதற்கு தான் சென்று கொண்டிருக்கிறேன். ஸ்டாலின் ராகுலை பிரதமராக்குவோம் என்கிறார். ராகுல் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்கிறார். ஸ்டாலின் ராகுலை பிரதமராக்குவோம் என தமிழகத்திற்குள் மட்டும் தான் சொல்கிறார். தமிழகத்தை விட்டு வெளிய சென்று எங்கேயும் ராகுலை பிரதமராக்குவோம் என ஸ்டாலின் சொன்னதில்லை. எனவே இரண்டுமே நடக்கப்போவதில்லை.
எங்கள் கட்சியின் சின்னத்திற்கு சின்னப் பிரச்னைகூட வராது. பிரதமர் மோடி சோஷியலாகவும், சோஷியல் மீடியாவிலும் பலத்துடன் இருக்கிறார். ஆனால் இன்று சில அரசியல் கட்சியினர் சோஷியல் மீடியாக்களை தவறாக பயன்படுத்துகின்றனர். சிறப்பான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம். எனவே சிறப்பான வெற்றி பெறுவோம். மத்திய பாஜக மலரும், தமிழகத்தில் இரட்டை மேலும் வலுப்பெறும்” என தெரிவித்தார். ஆனால், தமிழிசை தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக, பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, தூத்துகுடியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார் எனக் கூறப்படுகிறது. இதனால் தூத்துக்குடியில் பலத்த போட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.