மகளின் இறப்புக்கு நீதி கேட்டு திருப்பூர் கலெக்டர் அலுவலக அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர், உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் புதுக்காலனி நவக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சுந்தரம் - பொன்னம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச்சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பிரபு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் பிரபு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் பிரபுவின் தந்தை ஆறுமுகம் நந்தினிக்கு பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நந்தினி தனது கணவரிடம் கூறியபோது அவர் அதை கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 30ம் தேதி இரவு நந்தினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் நந்தினியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நந்தினியின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது ரத்த காயங்களுடன் நந்தினி பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து குன்னத்தூர் போலீசில் மகள் சாவில் மர்மம் இருப்பதாக நந்தினியின் பெற்றோர் புகார் செய்துள்ளனர். ஆனால், போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ஆர்.டி.ஒ. விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மகளின் சாவுக்கு காரணமான பிரபு மற்றும் அவரது தந்தை ஆறுமுகத்தை கைது செய்யக்கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி நந்தினியின் பெற்றோர் உறவினர்களுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இறப்புக்கு நீதிகேட்டும் மகள் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் காலில் விழுந்து பெற்றோர் கெஞ்சியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.