தமிழ்நாடு

முகிலனை கண்டுபிடித்து தரக் கோரி அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

webteam

சமூக ஆர்வலர் முகிலனை உடனடியாக கண்டுபிடித்து தரக் கோரி, சென்னையில் அனைத்துக்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வள்ளுவர் கோட்டம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுகவின் மல்லை சத்யா, திராவிடர் விடுதலை கழகத்தின் கொளத்தூர் மணி, தமிழ்ப் பேரரசு கட்சி தலைவர் கௌதமன், நடிகர் பொன்வண்ணன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சமூக ஆர்வலர் முகிலன் மாயமாகி, நூறு நாட்களுக்குமேல் ஆகியும், இதுவரை அவர் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், வேறு கோணத்தில் இவ்வழக்கை காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு முகிலன் விவகாரம் உதாரணமாக உள்ளதாகவும், எனவே இதற்கு அரசும், காவல்துறையும் பொறுப்பேற்றுக்கொண்டு, சமூக ஆர்வலர் முகிலனை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.