அரசு மருத்துவமனைகளில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை’ செயல்படுத்த உள்ளதாக தேர்தல் அறிக்கையில் தவெக குறிப்பிட்டிருந்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய், செப்டம்பர் 15-ஆம் தேதி, அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தங்க கொள்முதலுக்காக டெண்டர் கோரப்பட்டு, ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸுக்கு பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்வர் விஜய் அரசு முறைப் பயணமாக வெளிநாடு செல்ல இருப்பதால், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் தொடக்க விழா தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், முதல்வரின் வெளிநாட்டுப் பயணத் திட்டம் காரணமாக செப்டம்பர் 15-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை அன்றைய தினம் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், மாற்றுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள தங்கத்தில் எவ்விதக் குறையும் இருக்காது என்றும், 916 தரத்திலான தங்கத்திலேயே மோதிரங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கான அனைத்து தரச் சான்றுகளும் பெறப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், முதல்வர் விஜய் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிறகு, செப்டம்பர் 25-ஆம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர