தமிழ்நாடு

நித்தியானந்தா ஆசிரமத்தில் நடக்கும் மர்மங்கள் - மீட்கப்பட்ட சிறுமி சொன்ன உண்மைகள்..!

webteam

ஊர் ஊராக சென்று சொத்து குவிப்பதற்காகவே நித்தியானந்தா தங்களை பயன்படுத்தி வந்ததாக அவரது ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

குழந்தைக் கடத்தல் வழக்கில் நித்தியானந்தாவை கைது செய்ய குஜராத் காவல்துறையினர் அவரை தேடி வரும் நிலையில், ஆன்லைனில் தோன்றி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நித்தியானந்தா மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், அகமதாபாத் ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

“நான் குருக்குலத்தில் 2013-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை இருந்தேன். அங்கு எனது பெயரே நித்திய மயப் பிரியாதான். நான் அங்கே ஒரு சன்னியாசியாக இருந்தேன். ஆரம்பத்தில் மிகவும் பிடித்தே அங்கு நான் சேர்ந்தேன். யோகா, பூஜை என ரொம்ப நல்லாயிருந்தது. அதேபோன்று சிறந்த கல்வியும் இருந்தது. அதன்பிறகு 2019-ஆம் ஆண்டில் நாங்கள் குஜராத் ஆசிரமத்திற்கு மாறினோம்.

சாமி (நித்தியானந்தா) இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிறகு நாங்கள் பல நாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம். பின்னர் நான் இந்தியாவில் இருந்தேன். எனது இரண்டு அக்காக்களும் இன்னும் இரண்டு பேருடன் இணைந்து வெளிநாடுகளுக்கு சென்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். எனது அக்காக்களில் ஒருவரான தத்துவப்பிரியா மட்டும் திரும்பவில்லை. நந்திகா மட்டுமே வந்தார். நான் தத்துவப்பிரியா எங்கே என அனைவரிடமும் கேட்டேன். அப்போது அவர் சாமியுடன் சென்றுவிட்டதாக கூறினார்கள். 

அவர் இன்னுமும் அங்கேதான் இருக்கிறார். நந்திகா நிகழ்ச்சி தொகுப்புகளில் தலைமை நிர்வாகி. அதுமட்டுமின்றி அவர் சாமி புரோமேஷனில் முக்கிய நபர். எங்கள் இருவரிடமும் அதிக சக்திகள் இருந்ததால், நாங்கள் பலரிடம் சென்று பணம் மற்றும் இடத்தை வாங்கினோம். அதன்பின்னர் நந்திகா மீது அதிக அழுத்தம் குருக்குலம் சார்பில் இருந்து கொடுக்கப்பட்டது. அவரை அப்பா, அம்மாவை பார்க்கக்கூடாது எனத் தெரிவித்தார்கள். அப்போதுதான் பல பிரச்னைகள் வந்தன.

அதன்பின்னர் மூன்றாம் கண் மூலம் எங்களுக்கு சக்திகளை கற்றுக்கொடுத்தார். அதனை நாங்களும் வெளிப்படுத்தினோம். அதன்பிறகு சாமி பல விஐபிக்களை சந்தித்தார். கோயில் கட்டுவது எனப் பேசினார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள், சினிமாப் பிரபலங்கள் என பலரை சந்தித்தோம். பேசி நிதி திரட்டினோம். அதன் பின்னர் எங்களுக்கு சாமி இலக்கு நிர்ணயித்தார். எங்களுக்கு ரூ.8 கோடி இலக்கு கொடுக்கப்பட்டது. பாத பூஜை, பரிகாரம் என அனைத்திற்கு எவ்வளவு பணம் பெறப்பட்டது. இடம் பெறப்பட்டது எனக் கணக்குப் பார்த்தார்கள். அதன்பின்னர் எனக்குள் பல கேள்விகள் எழ ஆரம்பித்தன.

மூன்றாவது கண்மூலம் நூறு சக்திகளை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அதன்மூலம் தான் நாங்கள் பணத்தை எல்லாம் ஈட்டினோம். ஆண்டாள் விவகாரத்தில் எங்க அக்கா தவறாக பேசியதெல்லாம் சாமி சொல்லிக்கொடுத்ததுதான். சாமி பெண்களிடம் எப்படி நடந்துக்கொள்வார் என என்னால் சொல்ல முடியாது. என் அக்காவை பிரதமராக மாற்றுவேன் எனக் கூறியிருக்கிறார். மேலும் பலவற்றையும் சொல்லியிருக்கிறார்” இவ்வாறு தெரிவித்தார்.