Kollidam web
தமிழ்நாடு

தமிழ்நாடு | தேர்தலைப் புறக்கணித்த கிராமங்கள்.. ஏன் தெரியுமா?

சாலை, குடிநீர், கோயில் பிரதிஷ்டை, வாக்குச்சாவடி மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு கோரி பல மாவட்டங்களில் மக்கள் வாக்குப்பதிவைத் தவிர்த்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

PT WEB

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று, மாநிலம் முழுவதும் சராசரியாக 85.15% என்ற வரலாற்றுச் சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், பொதுமக்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட குடுவையூர் கிராம மக்கள், சாலை வசதி கேட்டு தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதனையடுத்து அவர்களுடன் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Nanguneri Polling booth

இதேபோல், விருதுநகர் கீழ அழகியநல்லூர் பகுதியில், சில நாட்களுக்கு முன்பு இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, ஒரு தரப்பினர் வாக்களிப்பதை புறக்கணித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட குளத்துவாய்பட்டி கிராம மக்களும் தேர்தலைப் புறக்கணித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் பகுதி மக்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில், குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் தங்களுக்கு முறையான நீதி கிடைக்கவில்லை எனக் கூறிய கிராம மக்கள், கருப்புக்கொடியேற்றி வாக்களிப்பதைப் புறக்கணித்தனர்.

அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதி கம்பூதிநாயக்கன்பட்டியில், வாக்குச்சாவடி மையம் இடமாற்றம் செய்யப்பட்டதால் அதிருப்தியான மக்கள், தெருக்களில் கருப்புக்கொடி கட்டி தேர்தலை புறக்கணித்தனர்.

Vengaivayal

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, உடைக்கப்பட்ட நல்லதங்காள் கோயில் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்வது தொடர்பான விவகாரத்தில் முடிவு எட்டப்படாத நிலையில், தேர்தலைப் புறக்கணித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

கொள்ளிடம் அருகே உள்ள முதலைமேடு திட்டு கிராம மக்கள், முறையான சாலைகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் காரணம் காட்டி, தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

மானாமதுரை அருகே போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்ததைக் கண்டித்து, அவரது உறவினர்கள் தேர்தலைப் புறக்கணித்து 47ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். இந்நிலையில், இதற்கு காரணமான 16 காவலர்களை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ள உறவினர்கள், நீதி கிடைக்க வலியுறுத்தி வாக்குப்பதிவு நாளிலும் போராட்டத்தை மேற்கொண்டனர்