தமிழ்நாடு

நெகிழித் தடையை மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கை? - பசுமை தீர்ப்பாயம் கேள்வி

webteam

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருட்களுக்குக் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், அதனையும் மீறி நெகிழி பொருட்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும் அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த பசுமைத் தீர்ப்பாய அமர்வு தடையை மீறி நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, தவறிழைத்தவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு, நெகிழி தடை அரசாணையைச் செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன போன்ற கேள்விகளை எழுப்பியது.

இவை குறித்து 2 மாதங்களுக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யத் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.