தமிழ்நாடு

வேளாண் சட்டங்களால் என்ன பயன்? முதல்வர் என்னுடன் விவாதிக்க தயாரா? ப.சிதம்பரம்

webteam

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களால் தமிழகத்திற்கு என்ன நன்மை என்பது குறித்து முதல்வர் பழனிசாமி தன்னுடன் விவாதிக்க தயாரா என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “திமுக -காங்கிரஸ் இரண்டும் இன்று ,நேற்றல்ல. பல ஆண்டு காலமாக கூட்டணியாக உள்ளது. தற்போது தமிழக அரசியலில் பல முறைகேடுகள் நுழைந்துவிட்டது.

வேளாண் திருத்த சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு என்ன நன்மை ,எதற்காக ஆதரிக்கிறீர்கள் என்று தமிழக முதலமைச்சர் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இருக்கும் வரை பாஜக முளைக்கவே முடியாது, முளைக்கவும் விடமாட்டோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன், விவசாயக்கடன், மகளிர் கடன்கள் என பாஜக ஆட்சியில் நிறுத்தப்பட்ட வங்கி கடன்கள் மீண்டும் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.