தமிழ்நாடு

தனிஷ்க் ஜூவல்லரி ஓனர் யார் தெரியுமா? வெளியான தகவல்

webteam

தனிஷ்க் ஜூவல்லரியின் ஓனர் குறித்த புது தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனத்தின் விளம்பரம் சர்ச்சையானது. அந்த விளம்பரத்தில் இந்துமத கர்ப்பிணி பெண்ணுக்கு அவரது இஸ்லாமிய மாமியார் வளைகாப்பு நடத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ‘இது லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதுபோல் இருக்கிறது’ என்று சிலர் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் ‘boycott tanishq’ என்ற ஹேஷ்டாக்கும் ட்ரெண்டிங் ஆனது.

எதிர்ப்புகள் கிளம்பியதால், தனிஷ்க் நிறுவனம் அந்த விளம்பர வீடியோவை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கியது. இதனைத்தொடர்ந்து, தனிஷ்க் நிறுவனம் விளக்கமும் அளித்தது. அதில், “வெவ்வேறு வாழ்க்கை சூழலை கொண்ட மக்கள் ஒன்றாக இணைந்து கொண்டாட வேண்டும், ஒற்றுமையின் அழகை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டது. ஆனால், இந்த விளம்பரத்திற்கு மாறுபட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

கவனக்குறைவாக உணர்ச்சிகளைத் தூண்டியதில் நாங்கள் மிகுந்த வருத்தப்படுகிறோம். எங்கள் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் அனைவரின் மன உணர்வுகளையும் நல்வாழ்வையும் மனதில் கொண்டு இந்த விளம்பரத்தை திரும்பப் பெறுகிறோம்’ எனத் தெரிவித்தது.

இந்நிலையில் டாடா நிறுவனத்தின் கீழ் செயல்படும் தனிஷ்க் ஜூவல்லரியில் தமிழக அரசுக்கு அதிக பங்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி தனிஷ்க் ஜூவல்லரியில் தமிழ்நாடு இண்டஷ்ரியல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் 27.88 சதவீதமும், டாட்டா சன்ஸ் பிரைவேட் லிமிடேட் 20.84 சதவீதமும், டாட்டா இன்வெஸ்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடேட் 2.1 சதவீதமும், டாட்டா கெமிக்கல் லிமிடேட் 1.56 சதவீதமும், எவார்ட் இன்வெஸ்மெண்ட் லிமிடேட் 0.56 சதவீதமும், பிஐஇஎம் ஹோட்டல் லிமிடேட் 0.06 சதவீதமும் பங்குதாரர்களாக உள்ளனர்.

இந்நிலையில், தனிஷ்க் ஜூவல்லரி சர்ச்சையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ மதச்சார்பின்மை விவகாரத்தில் தமிழக அரசு எப்போது முன்னோடி மாநிலமாக இருக்கிறது. இந்நிலையில் தனிஷ்க் விளம்பர சர்ச்சையில் முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.