Rajaram Pal case Horse trading
தமிழ்நாடு

விஸ்வரூபமெடுத்த குதிரை பேர விவகாரம்| அதிமுக MLA-களுக்கு சிக்கல்.. ராஜாராம் பால் வழக்கு சொல்வது என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் குதிரை பேரம் குறித்த தீவிரமான கருத்துக்கள் எழுந்த நிலையில், அது சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்கு எப்படி சிக்கலை ஏற்படுத்தும்.

Praveen Joshva L

தவெக ஆட்சியமைப்பைத் தொடர்ந்து, அமமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குதிரை பேரம் குற்றச்சாட்டுகள் எழுப்பிய நிலையில், 2005 “ஆபரேஷன் துரியோதனா” ஊழல் வழக்கில் இருந்து உருவான இராஜாராம் பால் தீர்ப்பு மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவான நிலையில், அக்கட்சிக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பிற கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற தவெக முயன்றது.

அப்போது அமமுக சார்பில் வென்ற காமராஜிடம் தவெக குதிரை பேரம் நடத்தியதாக அக்கட்சித் தலைவர் டிடிவி தினகரன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அதே போல சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தனது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில், அது குறித்த விவாதத்தில் திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரநிதிகள் குதிரை பேரம் தொடர்பாக கடுமையான கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும், இந்த தீர்மானத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் எதிராகவும், மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு தரப்பு எம்.எல்.ஏக்கள் ஆதரவாகவும் இருதரப்பாக வாக்களித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Raja Ra Pal

இரு தரப்பினரும் தங்கள் சார்பில் சட்டமன்ற கொறடாவை நியமித்த நிலையில், தாங்கள் நியமித்த கொறடாவே உண்மையானவர் என்று கூறி வருகின்றனர். மேலும் அதிமுக கொறடா உத்தரவை மீறி சில அதிமுக உறுப்பினர்கள் மாறி வாக்களித்துள்ளனர் என்றும், இந்த விவகாரத்தில் பணம் வாங்கி குதிரை பேரம் நடந்துள்ளது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருந்தார்.

இந்த சூழலில் சட்டமன்ற உறுப்பினர்கள் குதிரை பேரம் என அழைக்கப்படும் பணம் வாங்கி பதவி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் குறித்தான இராஜாராம் பால் வழக்கு கவனம் பெற்றுள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டில் "ஆபரேஷன் துரியோதனா" என்ற பெயரில் ஒரு தனியார் செய்தி நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக மக்களவையின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவையின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் பணம் பெற்றது அம்பலமானது. இதில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இராஜாராம் பால் என்பவரும் ஒருவராக இருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதனை விசாரிக்க நாடாளுமன்ற விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணை குழு அளித்த பரிந்துரையின் பேரில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் (Parliamentary Privilege) பயன்படுத்தி, அந்த 11 எம்.பிக்களும் அவையிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இராஜாராம் பால் தலைமையில் அந்த 11 எம்.பிக்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் நாடாளுமன்றத்திற்கு ஒரு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் இல்லை என்றும் தங்களை நீக்கியது சட்டவிரோதமானது என்றும் கூறப்பட்டது.

இந்த வழக்கில் மக்கள் பிரதிநிதிகள் பணம் பெற்றுக்கொண்டு செயல்படுவது தண்டனைக்குரியது என்றும், நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்துக்கும் அதன் உறுப்பினர்களின் தவறான நடத்தைக்காக அவர்களை அவையிலிருந்து நீக்கும் அதிகாரம் உள்ளது என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கே இராஜாராம் பால் வழக்கு என்று அழைக்கப்படுகிறது.

இந்த வழக்கைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு, மசோதாக்கள் மீது வாக்களிக்க பிற கட்சி உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்ததாக பல்வேறு முறை குற்றச்சாட்டுகள் எழுந்தது. அப்போது எல்லாம் இந்த இராஜாராம் பால் வழக்கும் பரபரப்பாக பேசப்படும்.

அந்த வகையில் தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பணம் கொடுத்து குதிரை பேரம் நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கு பேசப்படுகிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட உறுப்பினர்களின் MLA பதவி பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.