தமிழ்நாடு

'நான் என்ன ப்ரைம் மினிஸ்டரா' - செய்தியாளர்களிடம் பாய்ந்த பப்ஜி மதன்

JustinDurai

"நான் என்ன ப்ரைம் மினிஸ்டரா, என்ன வளைச்சு வளைச்சு எடுக்கிறீங்க" என ஒளிப்பதிவாளர்களை பார்த்து கேட்டார் 'பப்ஜி மதன்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை தனது யூடியூப்பில் வெளியிட்டு வந்தவர் மதன். தலைமறைவான இவரை நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வினோத் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தர்மபுரியில் வைத்து கைது செய்தனர். இதனையடுத்து மதனை சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு சோதனை நடத்தினர்.

இதனையடுத்து கைது செய்த மதனை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது ஊடக ஒளிப்பதிவாளர்கள், பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் கூடி நின்று மதனை காவல்துறையினர் அழைத்துச் செல்லும் காட்சிகளை பதிவு செய்து கொண்டிருந்தனர்.

மதனை காவல் ஆணையர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து உள்ளே அழைத்து செல்லும் வரை ஊடக ஒளிப்பதிவாளர்கள் காட்சியை பதிவு செய்தனர். அப்போது திடீரென  மதன், ஒளிப்பதிவாளர்களை பார்த்து, "நான் என்ன ப்ரைம் மினிஸ்டரா, என்ன வளைச்சு வளைச்சு எடுக்கிறீங்க" என கேட்டார். மதனை அழைத்து சென்ற காவல் ஆய்வாளர் "நீ அக்யூஸ்ட் வா" எனக் கூறியபடி உள்ளே கொண்டு சென்றனர்.

முதல் மாடியில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் வைத்து மதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆபாச பேச்சு வீடியோ குறித்தும், வீடியோவில் பேசக்கூடிய தோழிகள் குறித்தும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் பணப்பறிப்பில் மதன் ஈடுபட்டுள்ளாரா என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்திருப்பதாக மத்திய குற்றபிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.