தமிழ்நாடு

திருமண மண்டப கூரை இடிந்து விபத்து: பெண்ணின் தாயார் உட்பட 10 பேர் காயம்

webteam

ஆம்பூரில் தனியார் திருமண மண்டபத்தில் பால்சீலிங் இடிந்து விழுந்து கல்யாண பெண்ணின் தாய் உட்பட 10 பேர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுண்ணாம்பு காளை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சையத் மற்றும் ஷீபா நாவ்ரின் ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. அப்போது பெண்கள் பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் மீது மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த பால்சீலிங் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது.

இதில், பெண்ணின் தாய் ஷபானா மற்றும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம்; தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்பூர் வட்டாட்சியர் மகாலட்சுமி மற்றும் ஆம்பூர் நகர காவல் துறையினர் திருமண மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து ஆம்பூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமண நிகழ்ச்சியின் போது பால்சீலிங்  இடிந்து விழுந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.