தமிழ்நாடு

“என்னுடைய முழு சம்மதத்துடன்தான் திருமணம் செய்து கொண்டோம்”-எம்.எல்.ஏ மனைவி தகவல்

webteam

அதிமுக எம்.எல்.ஏ பிரபு தன்னை கடத்தி செல்லவில்லை எனவும் தாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என பிரபுவின் மனைவி சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தனித் தொகுதியின் எம்எல்ஏ பிரபுவுக்கும் தியாகதுருகத்தைச் சேர்ந்த கோயில் அர்ச்சகர் சுவாமிநாதனின் மகள் சௌந்தர்யாவுக்கும் திங்களன்று திருமணம் நடைபெற்றது. மணமகள் சௌந்தர்யா, திருசெங்கோடு தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2 ஆம் ஆண்டு மாணவி. அவரை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார் எம்எல்ஏ பிரபு. ஆனால், அவர் தனது மகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்திச் சென்றுவிட்டதாகக் குற்றம்சாட்டி தீக்குளிக்க முயன்றார் சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன். அதைத் தடுத்த காவல்துறையினர், சுவாமிநாதனை மீட்டனர். இந்நிலையில், சௌந்தர்யாவை கடத்தவில்லை என்றும், காதலித்துதான் மணம் முடித்ததாகவும் வீடியோ மூலம் விளக்கமளித்தார் எம்எல்ஏ பிரபு.

இதைத்தொடர்ந்து பிரபுவின் மனைவி சௌந்தர்யாவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அதிமுக எம்.எல்.ஏ பிரபு என்னை கடத்தி செல்லவில்லை. நாங்கள் இருவரும் 6 மாதங்களாக காதலித்து வந்தோம். அதற்கு எங்கள் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். இதையடுத்து நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

என்னை கடத்தி வந்ததாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் வெளியாகி வருகிறது. அவ்வாறு இல்லை. என்னுடைய முழு சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.