தமிழ்நாடு

"அவர்கள் சொல்வதை கேட்க நாங்கள் அங்கு செல்லவில்லை"- துரைமுருகன் பதில்

"அவர்கள் சொல்வதை கேட்க நாங்கள் அங்கு செல்லவில்லை"- துரைமுருகன் பதில்

webteam

நாங்கள் சொல்வதை கேட்கத்தான் அவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். அவர்கள் சொல்வதை கேட்க நாங்கள் செல்லவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமன் குறித்து பதில் கொடுத்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.

வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்தில் காட்பாடி பகுதிகளில் பயணியற் நிழற்குடை மற்றும் நியாயவிலைக் கட்டடம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசிய அமைச்சர் துரைமுருகனிடம், நாடாளுமன்றத்தில் நாங்கள் சொல்வதை திமுக எம்.பிக்கள் கேட்க மறுக்கிறார்கள் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர்  சொல்வதை கேட்க நாங்கள் அங்கு போகவில்லை, நாங்கள் (எம்.பிக்கள்) சொல்வதை கேட்கத்தான் அவர்கள் அமைச்சர்களாக உள்ளனர் எனக் கூறினார்.

மேலும் காவேரி - குண்டாறு இணைப்பு குறித்து கேட்கப்பட்டதற்கு காவேரி - குண்டாறு இணைப்பு தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தில் இடம்பெறவில்லை. இருந்தபோதும் மாயனூர் முதல் புதுக்கோட்டை வரை கால்வாய் வெட்டி வருகிறோம் என்று கூறினார்.

தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு நீர் திறக்கப்பட்டிருப்பது குறித்து கேட்கப்பட்டதற்கு, முல்லைப் பெரியாரில் தற்போது 137 அடிக்கு நீர் இருந்த போதிலும் மழை காரணமாக அளவுக்கு அதிகமாக நீர்வரத்து உள்ளதால் அதை கேரளாவுக்கு திறந்துவிட்டுள்ளோம் என்றும் அதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என கூறினார்.