தமிழ்நாடு

ஒகி புயலில் தொலைந்த 271 மீனவர்ளை தேடி வருகிறோம்: தமிழக அரசு தகவல்

ஒகி புயலில் தொலைந்த 271 மீனவர்ளை தேடி வருகிறோம்: தமிழக அரசு தகவல்

webteam

ஒகி புயலில் தொலைந்த 271 மீனவர்களை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி விரைவாக நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாக்கிய ஒகி புயலால் காணாமல் போன 551 மீனவர்களை மீட்கக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் நேற்றைய தினம் வரை 47 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், இன்னும் 271 மீனவர்களை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், 271 மீனவர்களை மீட்கும் பணி விரைவாக நடைபெற்று வருவதாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னரே அனைத்து மீனவர்களை கண்டுப்பிடித்து விடலாம் என்று கருதுவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில், ஆரம்பத்தில் இருந்தே அரசு தாமதமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. உடனிருக்கும் மீனவர்களை தேடுவதில் மற்ற மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் காணாமல் போன மீனவர்களை கண்டுப்பிடிக்க வேண்டும் என்பது அரசின் கடமையாக இருந்தும் அவர்கள் மெத்தனமாக செயல்படுவதாக மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார். அத்துடன் மீனவர்களை கண்டுப்பிடிப்பதற்கு கடலுக்கு எத்தனை கப்பல்கள் அனுப்ப பட்டுள்ளனர்? என்றும், மீனவர்களை மீட்க என்னனென்ன முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன? என்றும் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். எனவே, இதுகுறித்து விரிவான தகவல்களை தெரிவிப்பதற்காக தமிழக அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.