தமிழ்நாடு

கடலூர் மற்றும் ராமேஸ்வர பகுதிகளில் கடல் சீற்றம் - மீனவர்கள் பாதிப்பு

கடலூர் மற்றும் ராமேஸ்வர பகுதிகளில் கடல் சீற்றம் - மீனவர்கள் பாதிப்பு

webteam

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழக பகுதியில் கடல்சீற்றத்துடன் காணப்படுவதால், கடலூர், ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக மன்னார் வளைகுடா கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. 5வது நாளாக நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. பாம்பன் துறைமுகத்தில் 2 ஆம் நாளாக தொலைதூர புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதிகாலை முதலே தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் பலத்த காற்று வீசி வருவதால், சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமமடைந்தனர். தொடர்ந்து வீசும் காற்றால் சாலைகளை மணல் மூடி வருகிறது. கடல் நீரில் இறங்கவும், குளிக்கவும் காவல்துறை தடை விதித்துள்ளது.

கடலூர் துறைமுகத்தில் நேற்று ஏற்றப்பட்ட முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு, இன்றும் தொடர்கிறது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கரையிலிருந்து 8 கடல் மைல் தூரத்தில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மீன்வளத் துறை எச்சரிக்கை காரணமாக, 5ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.