ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையிலிருந்து கீழ்பவானி கால்வாய் பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்மூம், ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் நிலையில், தற்போது பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம், 112 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 27 டி.எம்.சியாக இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து ஆயிரத்து 500 கனஅடி நீரும், கீழ்பவானி கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.