தமிழ்நாடு

தண்ணீர் கலந்த பெட்ரோல்: பாதியிலேயே நின்ற கார் - வாகன ஓட்டியின் வேதனை வீடியோ!

kaleelrahman

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பிய கார் நடுவழியில் நின்றதால் வாகன ஓட்டி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலம் செல்வதற்காக தாளவாடி மலைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென சாலையில் ஓரிடத்தில் நகரமுடியாமல் நின்றது. இதையடுத்து காரில் சென்ற இளைஞர்கள் காரை பழுது நீக்க முயற்சித்தனர்.

அப்போது கார் ஸ்டார்ட் ஆகாததால் சம்பவ இடத்திற்கு வந்த கார் மெக்கானிக் காரில் நிரப்பிய பெட்ரோலை பெட்ரோலை பாட்டிலில் பிடித்து பார்த்தபோது அதில் தண்ணீர் கலந்துள்ளது தெரியவந்தது. இது குறித்து காரில் வந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் தாளவாடி அடுத்துள்ள சூசையபுரம் பிரிவில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பியதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பியதால் கார் நகர முடியாமல் நின்றதாக மெக்கானிக் கூறியதை அடுத்து காரை ஓட்டி வந்த இளைஞர்கள் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்வதாக பெட்ரோலை பாட்டிலில் பிடித்துக் காட்டியபடி வீடியோவில் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.