தமிழ்நாடு

பிலிகுண்டுலு காவிரியாற்றில் நீர்வரத்து 23,000 கனஅடியாக உயர்வு

Sinekadhara

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பால், பிலிகுண்டுலு காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில், அவற்றில் இருந்து காவிரியாற்றில் விநாடிக்கு 6,100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை காரணமாக பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து 10,000 கன அடியில் இருந்து 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயினருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் பெருமளவில் கொட்டிவருகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றங்கரையில் ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11,772 கன அடியில் இருந்து 15,740 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 114 புள்ளி 46 அடியாகவும், நீர் இருப்பு 84 புள்ளி 91 டிஎம்சியாகவும் உள்ளது.