தமிழ்நாடு

பொதுமக்களின் பணம் 1 ரூபாய் வீணாவதை கூட ஏற்றுக்கொள்ள முடியாது - நீதிபதிகள்

webteam

நீர்நிலை ஆக்கிரமிப்பில் விளையாட்டு அரங்கம் எவ்வாறு கட்டப்பட்டது இதற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? என்றும், பொதுமக்களின் பணம் 1 ரூபாய் வீணாவதை கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், வேலங்குடி கிராமம் ஆலங்குளம் கண்மாயில் அமைக்கப்பட்டுள்ள அம்மா தேசிய விளையாட்டு அரங்கத்தை அகற்றக் கோரிய வழக்கில், அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "விருதுநகர் மாவட்டம், T.வேலன்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆலங்குளம் கண்மாய் உள்ளது. அந்த ஆலங்குளம் கண்மாயை நம்பி சுற்றி உள்ள கிராமங்களில் 200 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது.

இந்நிலையில் 2019 - 2020 ஆம் ஆண்டு ஆலங்குளம் கண்மாய் நடுவே அம்மா தேசிய விளையாட்டு அரங்கம் ("MGNREGA" மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்) 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, விருதுநகர் மாவட்டம், வேலங்குடி கிராமம் ஆலங்குளம் கண்மாயில் அமைக்கப்பட்டுள்ள அம்மா தேசிய விளையாட்டு அரங்கத்தை அகற்றியும், நீர்நிலை ஆக்கிரமிப்பில் இது போன்ற விளையாட்டு அரங்கம் கட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் பேசிய நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்பில் விளையாட்டு அரங்கம் எவ்வாறு கட்டப்பட்டது இதற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? என கேள்வி எழுப்பினார். அப்போது அரசு தரப்பில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது நீர்நிலை ஆக்கிரமிப்பில் அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்கம் அகற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், பொதுமக்களின் பணம் 1 ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, வழக்கு குறித்து அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.