தமிழ்நாடு

லாரியில் பேட்டரி திருடும்போது கையும் களவுமாக சிக்கிய இளைஞர்களை கட்டி வைத்து தர்மஅடி!

webteam

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் பேட்டரி திருடியதாக 2 இளைஞர்களை கட்டிவைத்து கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் விருத்தாசலம் அருகே நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் அரிசியை ஏற்றி செல்வதற்காக நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்கிறது. இதில் பணி முடிந்து பல லாரிகளை இரவு நேரத்தில் குடோன் அருகே நிறுத்தி வைத்து சென்று விடுவது வழக்கம். அப்போது கடந்த ஒரு மாதத்தில் பெரியார் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களில் இருந்து பேட்டரிகள் திருடுபோவது தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு பேட்டரியும் 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளது என்பதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் அவதியடைந்து வந்தனர். மற்றும் இதுகுறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் பேட்டரி திருடனை கண்டுபிடித்து தருமாறு புகாரும் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து திருடுவது யார் என்று தெரியாமல் இருந்த நிலையில், இன்று அதிகாலை இரண்டு வாலிபர்கள் லாரியிலிருந்து இரண்டு பேட்டரியை திருடும்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். மேலும் பிடிபட்ட அவர்களை பாதிக்கப்பட்டவர்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் பல மணி நேரமாக கட்டி வைத்து, இதுபோல் எத்தனை பேர் திருடி உள்ளீர்கள் என கொலைவெறி தாக்குதல் செய்வது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி தற்போது பரவி வருகிறது.