தமிழ்நாடு

பரோட்டா சாப்பிட்ட இளைஞருக்கு வாந்திமயக்கம்! மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழப்பு!

webteam

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் பரோட்டா சாப்பிட்ட நிலையில், வாந்தி மயக்கம் ஏற்பட்டு இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (27). இவர் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் ஏஜெண்ட்டாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கார்த்திக்கின் குடும்பத்தார் அனைவரும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வீட்டில் இருந்த கார்த்திக்கிற்கு பரோட்டா வாங்கி வந்துள்ளனர்.

கார்த்திக் பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு இரவு உறங்க சென்றுள்ளார். ஆனால் அவருக்கு நள்ளிரவில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு கார்த்திக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கார்த்திக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டேன்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.