தமிழ்நாடு

“ஒரு தொண்டன் முதல்வராக இருக்கும் ஒரே கட்சி அதிமுக ” - முதல்வர் பழனிசாமி

“ஒரு தொண்டன் முதல்வராக இருக்கும் ஒரே கட்சி அதிமுக ” - முதல்வர் பழனிசாமி

webteam

ஒரு தொண்டன் முதல்வராக இருக்கும் ஒரே கட்சி அதிமுக என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக தேர்தல் பரப்புரை தொடக்கக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக தொடர்பாக பல விஷயங்களை பேசினார். அதில், “தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சி அமைத்த ஒரே கட்சி அதிமுக. அனைத்து துறைகளிலும் தமிழகம் சாதனை படைத்து வருகிறது. எதிரிகள் கூட உச்சரிக்கக்கூடிய வார்த்தை எம்.ஜி.ஆர். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. அவர்களுக்கு நாம்தான் வாரிசு. அதிமுகவையும் ஆட்சியையும் விமர்சிப்பவர்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிரிந்தபின் மீண்டும் இணைந்த ஒரே இயக்கம் அதிமுக. அதனை நிகழ்த்திக்காட்டியவர் ஜெயலலிதா. கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் பிரிந்தன. மீண்டும் ஒன்று சேர்ந்தனவா? அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர், எம்.பி, அமைச்சர், எம்.எல்.ஏ என பல்வேறு பதவிகளுக்கு வர வாய்ப்பு உள்ளது. அதிமுகவில் தொண்டனாக இருப்பதே பெருமை. சில புல்லுருவிகள் அதிகமுவை வீழ்த்த நினைத்தன. அது தவிடுபொடியாகிவிட்டது. அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்ந்து போவார்கள். இன்று நான் முதல்வராக இருக்கலாம். ஒபிஎஸ் முதல்வராக இருக்கலாம். நாளை தொண்டர்களில் ஒருவர் முதல்வராக வர வாய்ப்புள்ளது. ஒரு தொண்டன் முதல்வரானது அதிமுகவில் மட்டுமே சாத்தியம்” எனத் தெரிவித்தார்.