தமிழ்நாடு

விருதுநகர்: மரத்தின் மீது மோதிய இருசக்கர வாகனம் - மாணவர் உட்பட இருவர் பலி

webteam

விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதிய விபத்தில். பள்ளி மாணவர் உட்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் அருகே உள்ள தவசி லிங்காபுரத்தைச் சேர்ந்த சங்கிலி வீரன் என்பவரது மகன் ஸ்ரீராம். எட்டாம் வகுப்பு படித்துவரும் ஸ்ரீராம், அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியனாக பணிபுரியும் வைரமுத்து என்பவருடன் குமரலிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார்.



இந்நிலையில், வைரமுத்து, ஸ்ரீராம் ஆகிய இருவரும் கோவிலுக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் உருண்டச்சி ஊரணி பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வாகனம் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த வைரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் ஸ்ரீராமை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீராம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆமத்தூர் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.