தமிழ்நாடு

அரிதான யோகாசனத்துடன் அம்பு எய்தல் - விருதுநகர் மாணவி உலக சாதனை

webteam

விருதுநகரில் 10ஆம் வகுப்பு மாணவி அரிதான யோகாசனத்துடன், குறிவைத்து அம்புகளை எய்தி உலக சாதனை படைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சக்தி ஷிவானி. இவர் தனது சிறுவயது முதலே யோக பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் மாணவி நோபல் உலக சாதனைக்காக ஒரு முயற்சியை செய்தார். அதன்படி, ஒரு காலை தரையில் ஊன்றி, மற்றொரு காலை தலைக்கு மேல் தூக்கி நின்றபடி, தனது வாயில் அம்பை வைத்துக்கொண்டு 43 நொடிகளில் 3 அம்புகளை குறியை நோக்கி எய்தார். அவர் செய்த இந்த ஆசனத்தின் பெயர் திரு விக்கிரமா ஆசனா என்பதாகும். 

இந்த அரிய யோகாசனம் மூலம் அம்புகளை குறிவைத்து எய்தியதன் மூலம் மாணவி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதுபோன்ற சாதனை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை ஆகும். இச்சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. அதற்கான சான்றிதழும் மாணவி சக்தி ஷிவானிக்கு வழங்கப்பட்டது. 

மாணவி சக்‌தி இதற்கு முன் யுனிவர்செல் புக் ஆப் ரெக்கார்டுக்காக, மூன்று அடி நாற்காலியின் மீது நின்று தொடர்ந்து 11:16 நிமிடம் திரு விக்கிரமா ஆசன யோகா செய்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.