தமிழ்நாடு

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

kaleelrahman

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த பெரிய கருப்பன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். முன்னதாக காலை நேரம் என்பதால் ரசாயன கலவை பணிக்காக 3 பேர் மட்டும் வந்திருந்த நிலையில், தரைசக்கர பட்டாசு தயாரிக்க ரசாயன மூலப்பொருட்களை கலவை செய்யும் போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது.

இதில், ரசாயன கலவை பணியில் இருந்த சுந்தரகுடும்பன்பட்டியைச் சேர்ந்த சோலை விக்னேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உரியிழந்தார். விபத்தில் ஒரு பட்டாசு தயாரிப்பு அறை தரைமட்டமானது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்து குறித்து ஆலை உரிமையாளர் பெரிய கருப்பன் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிர் இழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் நடைபெற்ற 7 விபத்துக்களில் 17 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.