செய்தியாளர்: மணிகண்டன்
விருதுநகர் என்ஜிஓ காலனி பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீராம் எலக்ட்ரிகல்ஸ் என்ற கடையும் அதன் அருகே கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான ஹீரோ எலக்ட்ரிக் என்ற மின்சார பைக் ஷோரூமும் இயங்கி வருகிறது. இங்கு நேற்று வழக்கம் போல் ஷோரூமில் பணிபுரியும் நபர்கள் பணி முடித்துவிட்டு சென்ற நிலையில், நள்ளிரவு திடீரென அந்த ஷோரூமில் தீப்பிடித்து எரிந்துள்ளது .
இது குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கும் கடை உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே அருகில் உள்ள ஸ்ரீராம் எலக்ட்ரிக்கல் கடைக்கும் தீ பரவி உள்ளது. அதற்குள் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 19 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், சர்வீஸ்க்கு வந்த 9 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என மொத்தம் 28 ஸ்கூட்டர்கள் எரிந்து நாசமாகின.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசார், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.