தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் pt desk
தமிழ்நாடு

விருதுநகர்: தனியார் கல்லூரிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் தீவிர சோதனை

விருதுநகரில் தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கல்லூரி வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: A.மணிகண்டன்

விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலையில் தனியார் கல்லூரியொன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று வழக்கம் போல கல்லூரிக்கு மாணவ மாணவிகள் வந்துள்ளனர். அப்போது கல்லூரி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு கல்லூரியில் வெடிகுண்டு இருப்பதாக கடிதம் வந்துள்ளது. இதனை அடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் தீவிர சோதனை

தகவலின் பெயரில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கல்லூரியின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தை தொடர்ந்து இன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகள் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விருதுநகரில் உள்ள தனியார் மழலையர் பள்ளி மற்றும் தனியார் சிபிஎஸ்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.