தமிழ்நாடு

விருதுநகர்: தண்டவாளத்தை கடக்க முயன்ற கூலித் தொழிலாளி மீது ரயில் மோதி பலி

kaleelrahman

ராஜபாளையத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே காந்தி நகரைச் சேர்ந்தவர் கந்தவேல். கட்டட தொழிலாளியான இவர், தனது மனைவி மரகதவள்ளியுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கந்தவேல் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஐஎன்டியுசி நகர் பகுதியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்துள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் நேரில் சென்று பார்த்த போது, அவர் காணாமல் போன கந்தவேல் என்பது உறுதி செய்யப்பட்டது.

இரவில் தண்டவாளத்தை கடந்தபோது ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர். இது குறித்து காவல் துறையினர் தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஶ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.