தமிழ்நாடு

”எங்களுக்கு அடிப்படை வசதியே இல்லை”.. குடியிருப்பு போராட்டத்தில் இறங்கிய மலைவாழ் மக்கள்!

webteam

கெடுபிடி காட்டும் வனத்துறையினரை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியிலுள்ள பட்டுபூச்சி ஜெயந்தி நகர் பகுதி மக்கள் மலைப்பகுதியில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான பட்டுபூச்சி ஜெயந்தி நகர் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் 15 வகையான பொருட்களை எடுத்து விற்பனை செய்ய அரசு இவர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதனையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள மலைவாழ் மக்களுக்கு தற்போது வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும், தொந்தரவு செய்வதாகும் மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், இன்னம் பட்டை 2 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், அது மட்டுமல்லாது தேன் எடுத்து அதை வெளியில் கொண்டு விற்பனை செய்ய விடாமல் நீங்களே குடித்துக் கொள்ளுமாறும் தங்களை அலட்சியபடுத்துவதாகவும் குற்றம் சாட்டு எழுந்துள்ளது. தாங்கள் வசிக்கும் வீடுகள் சேதமடைந்து காணப்படுவதாகவும், பல்வேறு பகுதிகளில் ஓட்டை விழுந்துள்ளதால் பாம்பு உள்ளிட்ட விச சந்துக்கள் வீட்டிற்குள் வருவதாக மலைவாழ் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும் தங்கள் பகுதியில் நியாய விலை கடை இல்லாததால் தாங்கள் 4 கிலோமீட்டர் நடந்து சென்று தமிழக அரசால் வழங்கக்கூடிய இலவச அரிசியை பெற்றுவரும் நிலை உள்ளதாகவும், பெண்களுக்கு சுகாதார வளாகம் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் வேதனை தெரிவிக்கும் அவர்கள் நியாயவிலை கடை மற்றும் சுகாதார வளாகம் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்படி பல்வேறு கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெளியே கோயிலாவ அணைப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் தங்களது பிள்ளைகளுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு அங்கேயே சமைத்து வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் தாங்கள் இங்கேயே இருக்கப் போவதாகும் தங்கள் பகுதிக்கு வரப்போவது இல்லை எனவும் மலைவாழ் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.