தமிழ்நாடு

விழுப்புரம்: கட்டி ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக உடைந்த தளவானூர் தடுப்பணை

kaleelrahman

விழுப்புரம் தளவானூர் தடுப்பணையின் மதகு மீண்டும் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்திருக்கும் தளவானூர், என திரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ25.37 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது. 3 ஷட்டர்களுடன் கட்டப்பட்ட இந்த தடுப்பணையை அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்துவைத்தார்.

இந்த தடுப்பணை மூலம் தேக்கி வைக்கும் தண்ணீர் கடலூர் மாவட்டத்தில் என திரிமங்கலம் வாலாஜா வாய்க்கால் மூலம் கரும்பூர், கொரத்தி, திருத்துறையூர், பூண்டி, கள்ளிப்பட்டு, கண்டரக்கோட்டை, புலவனூர், மேல்குமாரமங்கலம், எல்.என்.புரம், பூங்குணம், கோட்லாம்பாக்கம் உள்ளிட்ட 14 ஏரிகளுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் தளவானூர், கள்ளிப்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த அணைதான் கடந்த ஆண்டு திடீரென உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக வடதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வடதமிழகத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி வருகிற நிலையில், தாளவனூர் தடுப்பணையின் மதகு மீண்டும் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. கட்டி முடிக்கப்பட்ட ஓராண்டுக்குள்ளேயே 2 வது முறையாக தளவானூர் தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.