தமிழ்நாடு

விழுப்புரம்: மழையால் வீடுகளை சூழ்ந்த மழைநீர்- தார்பாய்கள் வழங்கி உதவிய தன்னார்வ அமைப்பினர்

kaleelrahman

விழுப்புரத்தில் நேற்று பெய்த கன மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் குடிசைக்கு, 'இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே' என்ற அமைப்பின் சார்பாக கூரை வீடுகளை பாதுகாக்க தார்ப்பாய்களை வழங்கினர்.

விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் அருகே உள்ளது எண்ணாயிரம் கிராமம். இங்கே 12 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவர்களின் அடிப்படை தேவைகள் குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மோகன், அவர்களுக்கான அடிப்படை தேவைகளை செய்து கொடுத்தார்.

ஆனால், அவர்களுக்கான நிரந்தர வீடு எதுவும் கட்டித் தரப்படவில்லை. இந்த நிலையில் நேற்று பெய்த கன மழையால் அவர்கள் வசிக்கும் குடிசை வீடுகள் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தனர். மேலும் குழந்தைகளை கூட தூங்க வைக்க முடியாத நிலையே இருந்து வந்துள்ளது.

இதையறிந்த விழுப்புரத்தைச் சேர்ந்த 'இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு' என்ற தன்னார்வ அமைப்பு, கூரை வீடுகளுக்குள் மழை நீர் போகாமல் இருக்கவும் கூரைகளை பாதுகாக்கும் விதமாக தார்ப்பாய்களை வழங்கினர். இந்த அமைப்பைச் சேர்ந்த நத்தர்ஷா மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் நேரில் சென்று அந்த மக்களை சந்தித்து தார்பாய்களை வழங்கியதோடு அவர்களுடைய கல்வி தொடர்பான உதவிகளுக்கும் உதவுவதாக தெரிவித்தனர்.

- ஜோதி நரசிம்மன்