தமிழ்நாடு

விழுப்புரம் கொலைவழக்கில் துப்பு கொடுத்தால் சன்மானம்: காவல்துறை

webteam

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், துப்பு கொடுப்பவர்களுக்கு உரிய சம்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூரில் சிறுவன் சமயனை கொன்றதுடன், சிறுவனின் தாய் மற்றும் சகோதரி மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்கும்படி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 22ஆம் தேதி இரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக , குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 17 வட மாநிலத்தவர்கள் உட்பட 267 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனிடையே இந்த வழக்கை மத்திய புலனாய்த்துறைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளம்புத்தூர் கிராம மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆராயி மற்றும் அவரின் மகள் , புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆராயி உடல்‌நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் உடல் நிலை கவலைக்கிடமாக‌ இருப்பதாக கூறப்படுகிறது.