தோரணமாக மதுபாட்டில்கள்
தோரணமாக மதுபாட்டில்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

யானைகளை விரட்ட மதுபாட்டில்களை கையில் எடுத்த கிராம மக்கள்.. தோரணம் கட்டி புது முயற்சி!

யுவபுருஷ்

செய்தியாளர் - மகேஷ்வரன்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்து வருகிறது. இதனால், யானைகளை கண்காணித்து வனத்திற்குள் விரட்டும் பணியில் வனத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தபோதிலும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல், குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.

இந்த நிலையில்தான், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே வரும் காட்டு யானைகளை விரட்டுவதற்கு வித்தியாசமான முயற்சியை பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு பகுதி மக்கள் மேற்கொண்டுள்ளனர். குடித்துவிட்டு வீணாக வீசப்படும் மது பாட்டில்களை சேகரித்து, அதில் தோரணங்களைக் கட்டி குடியிருப்புகள் முன்பு சாரசாரையாக தொங்கவிட்டுள்ளனர்.

யானைகள் தோரணங்களை கடந்து வந்தால், மது பாட்டில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு சத்தம் எழுப்பும். இந்த சத்தத்திற்கு பயந்து காட்டு யானைகள் அப்பகுதிக்கு வருவதை தவிர்க்கும் என்றும் கூறப்படுகிறது.