தமிழ்நாடு

அரசுப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை மற்றும் வளர்ச்சி நிதி வழங்கிய கிராம மக்கள்

webteam

விளாத்திகுளம் அருகே அரசுப் பள்ளிக்கு கல்வி சீர் மற்றும் வளர்ச்சி நிதியை கிராம மக்கள் வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வெம்பூரில் 1979-ம் ஆண்டு முதல் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஒருங்கிணைந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் நிதி திரட்டியுள்ளனர். இதையடுத்து பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளிக்கு டேபிள், நாற்காலி, பீரோ, மின்விசிறி, கடிகாரம், சாக்பீஸ், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் என 1 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருள்களை வாங்கியுள்ளனர்.

இதையடுத்து மேள தளம் முழங்க பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்துடன் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி, கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக பள்ளிக்கு சென்றனர். இதைத் தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த பொருள்களை பள்ளி தலைமை ஆசிரியர் முத்துமாரி மற்றும் ஆசிரியர்களிடம் வழங்கினார். மேலம் பள்ளி வளர்ச்சிக்கு ரூ.70 ஆயிரம் வளர்ச்சி நிதியும் வழங்கி அசத்தியுள்ளனர்.

பள்ளிக்கு தேவையான பொருள்கள் மற்றும் வளர்ச்சி நிதி வழங்கிய கிராம மக்களை பலரும் பாராட்டியுள்ளனர்.