மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி
மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி  puthiya thalaimurai
தமிழ்நாடு

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் மறைவு

webteam

அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்த புகழேந்தி, விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்குப்பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர், விக்கிரவாண்டி அருகே முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற பரப்புரை கூட்டத்தில் நேற்று கலந்து கொள்ள சென்றுள்ளார்.

மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி

அப்போது அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், உடனடியாக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு, சிகிச்சை அளிக்க சென்னையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் விழுப்புரம் விரைந்திருந்த நிலையில் அவர் காலமான செய்தி வெளியாகியுள்ளது.

புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு.புகழேந்தி அவர்கள் எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும் அதிர்ச்சியும் வேதனை தருகிறது. கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார்.

நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார். உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

CM Stalin | மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி

1973-இல் கழகத்தின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய திரு. புகழேந்தி அவர்கள், தமது அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார். 1996-இல் ஒன்றியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர்.

விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்த திரு. புகழேந்தி அவர்களைச் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அந்த மக்கள் அனுப்பி வைத்தனர். எப்போது என்னைச் சந்திக்க வந்தாலும், தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளுடன்தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார்.

அமைச்சர் பொன்முடி - மறைந்த எம்.எல்.ஏ புகழேந்தி - முதல்வர் மு.க.ஸ்டலைன்

கழகத் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடி அவர்களுக்கு உற்ற துணையாக விளங்கியவர் புகழேந்தி. மேலும் மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தி அவர்களது மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி

இந்நிலையில் உயிரிழந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் உடல், பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்காக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு சென்ற அமைச்சர் பொன்முடி, அமைச்சர் ஏ.வ.வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

எம்.எல்.ஏ புகழேந்தி உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி

இதைத் தொடர்ந்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அங்கே அமைச்சர் பொன்முடி கண்கலங்கி நின்ற காட்சி, காண்போரையும் கலங்க வைத்துள்ளது.

இன்று மாலை 5 மணி வரை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்பு அவருடைய சொந்த ஊரான அத்தியூர் திருவாதி கிராமத்தில் நாளை மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது.