விகடன் குழுமத்தின் இணையதளம் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், கருத்து சுதந்திரத்திற்காக களத்தில் நிற்போம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னணி தமிழ் வார இதழான விகடன் குழுமத்தின் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பல இடங்களில் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என வாசகர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள விகடன் குழுமம், விகடன் இணைய இதழில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டதையும், அதற்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய அரசுக்கு புகார் கடிதம் எழுதியதையும் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், அரசுத் தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் அக்குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
நூற்றாண்டு காலமாக கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், ஒருவேளை கேலிச்சித்திரம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால் அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் விகடன் குழுமம் கூறியுள்ளது.