தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்வராக பதவியேற்ற நிலையில், தவெக தலைமையிலான அரசு 100 நாட்களைக் கடந்திருக்கிறது. இந்தச்சூழலில் தான், ஜனநாயகன் படம் ஒரு வாரத்தில் காத்து வாங்கியது போலவே, தவெகவின் 100 ஆட்சியும் என அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”தவெக ஆட்சி அமைந்திருப்பது விபத்து. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. 5 ஆண்டுகள் ஆட்சி இருக்காது. ஒருவேளை ஆட்சி இருந்தால், இவர்களும் கடன் வாங்கி தான் வைப்பார்கள். இதையெல்லாம் மக்கள் தான் கடன் கட்ட வேண்டும். ஆட்சியாளர்கள் வாங்கும் கடனை மக்கள் தான் அடைக்க வேண்டும்.
நான் முதல்வராக இருந்த 4 ஆண்டுகளில் 11 மருத்துவ கல்லூரி கொண்டு வந்தோம். தற்போது தமிழக மக்கள் தத்தளிக்கிறார்கள். அமைச்சரவையில் 3 பேர் மட்டும் தான் பேசுகிறார்கள். அதுவும், கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். இப்படி தான் 100 நாள் ஆட்சி இருக்கிறது. ஜனநாயகன் படம் அப்படி இப்படி இருக்கும் என ரீல்ஸ் போட்டாங்க. ஆனால் ஒரே வாரத்தில் காத்து வாங்குது. அப்படித்தான் இந்த 100 நாள் ஆட்சியும் இருக்கிறது.
மேலும், சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினை பேசுவதில்லை. ஆளுங்கட்சி-எதிர்கட்சி சொந்த பிரச்சினை தான் பேசுகிறார்கள். மக்கள் பிரச்சினை பேசுவது அதிமுக தான்” எனத் தெரிவித்துள்ளார்.