தமிழ்நாடு

அரசின் அறிவுறுத்தலை மீறினால் கடும் நடவடிக்கை - விஜயபாஸ்கர்

அரசின் அறிவுறுத்தலை மீறினால் கடும் நடவடிக்கை - விஜயபாஸ்கர்

webteam

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. எனவே பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தியாவை பொருத்தவரை வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பெரிய கடைகள் உள்ளிட்டவைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பல்வேறு மாவட்டங்களையும் முடக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அந்தவகையில், தமிழகத்தை பொருத்தவரை சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முடக்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் தனிமைப்படுத்தப்பட்டும் வீடுகளில் தங்க வைக்கப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட சிலர் வெளியே நடமாடி வருகின்றனர். அரசின் அறிவுறுத்தலை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.