டி.கே.எஸ் இளங்கோவன் pt desk
தமிழ்நாடு

”விஜய் மிகச் சிறந்த காமெடியனாக வாழ்ந்து வருகிறார்; அவரை புறக்கணிக்கிறோம்” - டி.கே.எஸ் இளங்கோவன்

முதல்வரே விசில் சின்னத்திற்கு வாக்களிப்பார் என்பது நகைச்சுவை, மிகச்சிறந்த காமெடியனாக விஜய் வாழ்ந்து வருகிறார் என திமுக செய்தித்தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

PT WEB

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி இன்று பனையூரில் நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது, திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், தமிழகத்தின் அனைத்து வீடுகளிலும் தவெக இருப்பதாகவும், முதல்வர் ஸ்டாலின் நன்றாக தூங்கும்போது அவரை எழுப்பிக் கேட்டால் விசில் சின்னத்திற்கு வாக்களிப்போவதாக கூறுவார் எனவும் பேசியிருந்தார். இந்தநிலையில் தான், திமுக செய்தித்தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் விஜயை புறக்கணிக்கப்போவதாக விமர்சித்திருக்கிறார்.

தவெக தலைவர் விஜய், டி.கே.எஸ் இளங்கோவன்

இதுகுறித்து அவர் பேசுகையில், “விஜய்க்கு எதிராக நாங்கள் எந்த கருத்தையும் கூறவில்லை, அவரை புறக்கணிக்கிறோம். காலை 12 மணிக்கு வருவதாக கூறிவிட்டு மாலை 7 மணிக்கு வந்த காரணத்தினால் குடிக்க தண்ணீர் இல்லாமல் உணவில்லாமல் மயக்கம் போட்டு விழுந்து இறந்துள்ளார்கள்.. அதற்கு பொறுப்பு ஏற்காமல் அதைக் கூட திமுக தான் செய்தது என பொய் பிரச்சாரம் விஜய் செய்து வருகிறார். எப்படியாவது முதலமைச்சராக வேண்டுமென்ற கனவில் விஜய் உள்ளார். எனவே, முதலமைச்சராக இருப்பவரைப் பற்றி குறை சொன்னால் தான் தன்னை முதலமைச்சராக்குவார்கள் என நினைத்துப் பேசுகிறார். எம்ஜிஆர் எங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர் அவர்தான் எங்களை எதிர்த்தார். எம்ஜிஆர் உடன் விஜய் ஒப்பிடுவது பைத்தியக்காரத்தனம் என தமிழ்நாடு மக்களுக்கு தெரியும்.

எம்ஜிஆர்-ரோடு விஜய் ஒப்பிடுவது அதீத கற்பனை!

எம்ஜிஆர் மக்களுக்காக வாழ்ந்தவர், திரைப்படத்தில் கொள்கைகளை கூறியவர். விஜய் அவரது கொள்கை என்ன என்பது குறித்து இதுவரை பேசாமல் திமுகவை திட்டுவது தான் கொள்கையாக பேசிக் கொண்டுள்ளார். எம்ஜிஆர் மக்களுக்கான திட்டங்களை முன்வைத்து திரைப்படங்களை எடுத்தவர். எம்ஜிஆர் திரைப்படங்களில் கொள்கை சார்ந்த கருத்துக்கள் இருக்கும். எம்ஜிஆர் ரோடு விஜய் ஒப்பிடுவது அதீத கற்பனை.

தவெக தலைவர் விஜய்

எங்களுடைய ஆட்கள் எந்த அராஜகத்திலும் இறங்குவதில்லை. தண்ணீர் உணவில்லாமல் மயங்கி கிடந்தவர்களை காப்பாற்றாமல் விஜய் ரசிகர்கள் காலால் எட்டி உதைத்து சென்ற காட்சியை நாம் பார்த்தோம். எது அநீதி, எது அக்கிரமம் என மக்கள் பார்த்துக் கொண்டுள்ளார்கள். விஜய் முதலமைச்சர் கனவில் உள்ளார், அடுத்த முதலமைச்சராக தான் வர வேண்டும் என கூறிதான் கட்சி ஆரம்பித்தார். மக்களுக்காக அவர் கட்சியை ஆரம்பிக்கவில்லை. முதல் தேர்தலிலேயே போட்டியிடாமல் மக்களுக்காக போராட்டங்களை நடத்தி சிறைவாசம் சென்றவர்கள் எங்கள் தலைவர்கள். ஆனால், வந்த உடனே முதலமைச்சராக வேண்டுமென கற்பனையில் வருகிறார் விஜய். விஜய் ஒரு போராட்டம் நடத்தி சிறைவாசம் சென்றால் கட்சியே வேண்டாம் என ஓடி விடுவார். தியாகம் செய்து வளர்ந்த இயக்கம் திமுக.

சிறந்த காமெடியனாக விஜய் வாழ்ந்து வருகிறார்!

முதல்வரே விசில் சினத்திற்கு வாக்களிப்பார் என்பது நகைச்சுவை. மிகச்சிறந்த காமெடியனாக விஜய் வாழ்ந்து வருகிறார். கதாநாயகன் வாய்ப்பு போய்விட்டால் நகைச்சுவை நடிகர் வாய்ப்பு கிடைக்கும் என முயற்சி செய்கிறாரோ தெரியவில்லை. இரண்டாண்டுகளில் விஜய் பெர்பார்மன்ஸ் என்ன? கட்சியின் கொள்கைகளை பட்டியலிட சொல்லுங்கள். பல புள்ளி விவரங்கள் எடுத்து தான் பாஜக தமிழக வெற்றி கழகத்தை கூட்டணியில் சேர்க்காமல் புறக்கணித்து விட்டது” எனப் பேசியிருக்கிறார்.