தமிழக அரசு Pt web
தமிழ்நாடு

200 யூனிட் இலவச மின்சாரம்.. முதல் கோப்பில் முதல்வர் விஜய் கையெழுத்து.. தமிழக அரசு விளக்கம்!

முதல்வராக பதவியேற்றுள்ள விஜய், 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், ஏற்கனவே செயல்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் மின்சாரம் திட்டமும் தொடரும் என தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது.

Premkumar S

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய், இன்று பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கம் உள்ளிட்ட கோப்புகளில் முதல் கையெழுத்திட்ட முதல்வர் விஜய், அதைத் தொடர்ந்து தனது முதல் உரையாற்றினார். அப்போது, ”திட்டங்களைச் செயல்படுத்த போதிய அவகாசம் வேண்டும். ஆட்சியில் ஜெயித்துவிட்டோம் என்று ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். என் அரசில் யார் தவறு செய்தாலும் விடமாட்டேன். ஆட்டம் ஆடுவோம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இந்த நிமிடமே அழித்துவிடுங்கள். எல்லோரும் சேர்ந்து புதிய ஆட்சியைத் தருவோம்” என்றார்.

தவெக தேர்தல் அறிக்கை

ஏற்கனவே, தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரத்திட்டம் இருக்கும் நிலையில், தவெகவின் தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய அறிவிப்பில் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், இரண்டு மாதங்களில் 500 யூனிட்டுக்கு கீழ் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகளுக்கே இச்சலுகை பொருந்தும் எனத் தெரிவித்திருந்தது.

இந்தசூழலில் தான், 500 யூனிட்டுக்கு மேல் செல்பவர்களுக்கு ஏற்கனவே, 100 யூனிட் இலவச மின்சாரம் பொருந்துமா? எனப் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், 200 யூனிட் இலவச மின்சார திட்டம் குறித்து தமிழக அரசு விளக்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 500 யூனிட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு ஏற்கனவே, நடைமுறையில் உள்ள 100 யூனிட் மின்சாரம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ. 1,730 கோடி கூடுதல் செலவு ஆகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.