கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தொடர்ந்து இந்த சம்பவம் பேசுபொருளாக இருந்துவருகிறது.
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு தவெக தரப்பில் ரூ.20 லட்சமும், காயம் ஏற்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்ட போதும், தவெக தலைவர் விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
இந்தசூழலில் கரூர் துயரச் சம்பவம் குறித்து பேசியிருக்கும் தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எமோசனலாக பேசியுள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவையொட்டி சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தவகெ தலைவர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் வந்து மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆரம்ப காலத்தில் இருந்து விஜயகாந்த் குடும்பத்துடன் மிகுந்த இணக்கமாக இருந்து வருகிறோம். நேற்றுவரைக்கும் நல்லா இருந்திருக்காங்க திடீர்னு இப்படி ஆயிருக்கு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் என்று பேசினார்.
அவரிடம் கரூர் சம்பவம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ஒரு இறப்புக்கு வந்திருக்கோம் இங்க வந்து இந்த கேள்வியை கேட்குறீங்களே, ஏற்கனவே நாங்க மன கஷ்டத்தில் இருக்கோம் என்று எமோசனலாக பேசினார்.