தமிழ்நாடு

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்..!

webteam

ஊதியம் இன்றி தவித்த செம்பாக்கம் கட்டுமான தொழிலாளர்கள் குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியானதன் எதிரொலியாக அவர்களுக்கு விஜய் ரசிகர்கள்  அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.

கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் அத்தியாவசிய தேவையை தவிர வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் பல தொழில்கள் முடங்கியுள்ளன. பல தொழிலாளர்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டவே கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே அரசும் தங்களால் முடிந்த அளவு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது. கொரோனா நிவாரண நிதிக்காக நன்கொடை அளிக்க விருப்பமுள்ளவர்கள் அளிக்கலாம் என பிரதமரும் முதலமைச்சரும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் படி நடிகர் விஜய் 1.30 கோடி நிவாரண நிதியாக அளித்தார்.

இந்நிலையில், ஊதியம் இன்றி தவித்த செம்பாக்கம் கட்டுமான தொழிலாளர்கள் குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக  உழைப்பாளர் தினத்தில், உழைப்பு ஊதியம் இழந்து தவிக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கு செம்பாக்கம் நகர விஜய் மக்கள் இயக்க இளைஞரணி சார்பில் அரிசி,காய்கறி,மளிகை மற்றும் அத்யாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.