தமிழ்நாடு

வாரிசு Vs துணிவு: சபரிமலையில் மாறி மாறி பேனர் வைக்கும் விஜய் - அஜித் ரசிகர்கள்!

நிவேதா ஜெகராஜா

பொங்கல் பண்டிகைக்கு விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக மோதுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இரண்டு பேரின் படங்களுக்கும் (வாரிசு மற்றும் துணிவு) சரிசமமாக திரையரங்குகள் சமமாக ஒதுக்கப்படுமா என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்து வந்தன. அவையே இன்னும் முழுமையாக ஓயாத நிலையில், இரு தரப்பு ரசிகர்களும் பல்வேறு விதமாக தங்களின் ஆதர்ச நாயகர்களின் படங்களுக்கு செய்து வருகின்றனர்.

அப்படி சமீபத்தில் விஜய் ரசிகர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி பேனர் வைத்து வழிபாடு நடத்தினர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் போல் அஜித் ரசிகர்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அஜித்தின் துணிவு திரைப்படம் வெற்றி பெற வேண்டி பேனருடன் நேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறையை சேர்ந்த ஐயப்பன் மகேஷ் சூர்யா ஆகிய மூன்று ரசிகர்கள் அஜித்தின் துணிவு படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு செய்தனர்.

முன்னதாக வாரிசு படத்துக்கு பேனர் வைத்ததும் மயிலாடுதுறை சார்ந்த ரசிகர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சுபாஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய இரண்டு இளைஞர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று அங்கே பதினெட்டாம்படி அருகில் வாரிசு பட பேனரை வாழ்த்தி உயர்த்தி பிடித்தபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தியுள்ளனர்.

ஆக, ஒரே பகுதியை சேர்ந்த இருதரப்பு ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த நடிகரின் படம் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டு உள்ளனர். ரசிகர்களின் இந்த செயலை, பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக கோயில்களில் பொழுதுபோக்கு படங்களின் மத்தியில் நிலவும் போட்டி மனப்பான்மையை கொண்டு செல்வது பற்றி பலரும் விமர்சனங்கள் வைத்து வருகின்றனர்.