தமிழ்நாடு

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏரறிஞர்’ விருது வழங்கினார் வெங்கையா நாயுடு

webteam

விவசாயிகள் தங்கள் சந்ததியினருக்கு விவசாயம் குறித்து கற்றுக் கொடுக்கிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னையில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏரறிஞர்’ என்ற விருதை வழங்கிய பின்பு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், எம்.எஸ்.சுவாமிநாதன் தன் வாழ்நாளை உழவர்கள் நலனுக்காகவும், வேளாண் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணித்ததாக அவர் பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் துரைக்கண்ணு, பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னையில் இன்று நடைபெற்ற பாரதி பெருவிழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். அப்போது முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயனுக்கு பாரதி விருதை வெங்கையா நாயுடு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ் கற்க தனக்கும் ஆர்வம் இருப்பதாக கூறினார். பாரதியார் பாடல்கள் மற்றும் கருத்துகளை தேசிய பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.