தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும் - வானிலை மையம் அறிவிப்பு

Sinekadhara

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று(11.11.2021) அதி கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

சென்னையில் அண்ணாநகர், மாம்பலம், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, வேளச்சேரி, சாலிகிராமம், அம்பத்தூர், சூளைமேடு, கிண்டி, தரமணி, மயிலாப்பூர், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துவருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று(11.11.2021) அதி கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

அதேபோல் நாளை(12.11.2021) நீலகிரி, கோவை, கன்னியாகுமரியிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும், தமிழக கடற்கரை பகுதி, தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவித்திருக்கிறது.

இதுவரை 3 இடங்களில் அதி கனமழையும், 23 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது எனவும் அறிவித்திருக்கிறது. சென்னையில் அக்டோபர் 1 முதல் இதுவரை 23செ.மீக்கு பதில் 47 செ.மீ மழை பதிவானது; இது இயல்பைவிட 77% அதிகம். தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் இதுவரை 20செ.மீக்கு பதில் 39 செ.மீ மழை பதிவானது; இது இயல்பைவிட 54% அதிகம்.