மூன்று முறை தமிழக முதல்வர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என உச்சகட்ட பதவிகளை அலங்கரித்த ஓ. பன்னீர்செல்வம், கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளார். இந்நிலையில், 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' என்ற பெயரில் தனது ஆதரவாளர்களைத் திரட்டி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் சட்டப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார். ஓ. பன்னீர்செல்வத்துக்கு பக்கபலமாக நின்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர். ஆனாலும், ஓ.பன்னீர் செல்வம் ‘தை’ முடிவதற்குள் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என்று நம்பிக்கையுடன் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.
அதேபோல், எடப்பாடி கே.பழனிசாமி மீதான அவரது விமர்சனமும் கொஞ்சமும் குறையவில்லை. இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில் அதிமுகவின் சட்ட விதிகள் மீறப்பட்டதாக அவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை பெரிதும் எதிர்பார்த்திருப்பதாக சொல்கிறார்கள். எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதிகளின்படி, அதிமுக பொதுச்செயலாளரைத் தொண்டர்கள்தான் வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், கே. பழனிசாமி இந்த விதிகளைச் சிதைத்து விட்டார் என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கியக் குற்றச்சாட்டு. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஆறு வழக்குகளும் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளாக நடைபெற்று வருகின்றன. இதில் வரும் தீர்ப்பே இறுதியானது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
"சமீபத்தில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், பிப்ரவரி 10ஆம் தேதியே நல்ல தீர்ப்பு வரும் என்று நம்பிக்கையூட்டி இருந்தார். ஆனால், தற்போது அந்தத் தீர்ப்பு வரும் 16ஆம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தீர்ப்பு ஓ. பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக அமைந்தால், அது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவேளை தீர்ப்பு பாதகமாக அமைந்தால், அது ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலத்திற்குப் பெரும் பின்னடைவாக அமையும். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்தத் தீர்ப்பை ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் பரபரப்போடு எதிர்பார்த்து காத்திருக்கிறது.