Election Boycott banner
Election Boycott banner pt desk
தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் - தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பதாகை!

webteam

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி கண்டறியப்பட்டது.

Vengaivayal issue

ஒட்டுமொத்த மனிதக் குலத்தின் இழிவான செயலாக பார்க்கப்பட்ட இந்த சம்பவம் நடந்து 15 மாதங்கள் ஆகும் நிலையில், இதுவரையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காததால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அந்த கிராம மக்கள் 2 இடங்களில் பதாகைகள் வைத்துள்ளனர்.

அந்த பேனரில் “குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவத்தில் நீதி கிடைக்காததால் வருகின்ற தேர்தலை புறக்கணிக்கப் போகிறோம்” என குறிப்பிட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அனுமதி இன்றி அங்கு பதாகை வைத்துள்ளதால் அந்த கிராம மக்களோடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.