செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முரண்பாடுகள் உள்ளதாகவும் அதனை ஏற்கக் கூடாது எனவும் புகார் தரரான கனகராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதேபோல் சிபிசிஐடி போலீஸாரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கை குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மாற்ற வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணைகள் ஏற்கனவே முடிந்த நிலையில் இன்று வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தி உத்தரவை பிறப்பித்தார். அதில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவை ஏற்று இந்த வழக்கை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார். மேலும் புகார் தரப்பு வழக்கறிஞர்கள் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்த மனுவை ஏற்பதற்கு போதிய முகாந்திரம் உள்ளதால் சிபிசிஐடி போலீசாரின் குற்றப்பத்திரிக்கையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி புகார் தரப்பு கேட்ட குற்றப்பத்திரிகை நகலை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளார்.